மீன் தொட்டி

Tuesday, August 17, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 03

அடைக்கப்பன் அவர்களின் தலைமையில் பண்ணை

மூக்காண்டிக்கோனாரின் மறைவுக்குப்பின், அனைத்து முதற்கட்ட முக்கிய பெரியவர்களாலும், காலத்தின் கட்டாயத்தாலும் மூ. அடைக்கப்பன், தலைமகன், அவர்கள் தலைமையில் ஊரின் பொறுப்பையும், மாபெரும் பண்ணையின் பொறுப்பையும் ஒப்படைக்கபட்டது. அவர் தன் வாழ்க்கையை முழுமனதோடு கிராமத்தின் வளர்ச்சிக்காகவும், விவசாயத்தின் வளர்ச்சிக்காகவும் அர்பணித்துக் கொண்டார் அதற்கு சான்றாக தமிழக அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட காவல்த்துறை ஆய்வாளர் பதவியை நிராகரித்தார். விவசாயத்துறையில் பழமை மாறாது, அதே நேரத்தில் புதிய அணுகுமுறைகளை கையாண்டு அதிக மகசூலை ஈட்டினார். இவர் கிழக்கி கிணறு, செவிடங்காட்டு கிணறு, பெரியகுளத்து கிணறு ஆகிய பல கிணறுகளை வெட்டி அதில் வெற்றியை கண்டார். கிணறுகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும், பண்ணையின் நீர்தேவைகளை பூர்த்திசெய்யும் வழிவகையில் கோவல் காட்டின் ஒரு பகுதியை கிராமபஞ்சாயதிற்கு எழுதிவைத்து, அப்பகுதியில் சிறு நீர்தேக்கத்தை அமைத்து அதற்கு கோவல் குளம் என்று பெயரிடப்பட்டது. குளங்களை ஆழப்படுத்துதல், குழுமிகளை அமைத்து நீர்பாசன வசதியை மேன்படுத்துதல் போன்ற பணிகளை விவசாயத்திற்காக செய்தார்.

வண்டிமாட்டு வழிதடங்களை அரசாங்க அலுவலர்கள் துணைகொண்டு நேர்த்தியான சாலையாக மாற்றியமைத்தார். இதுபோன்ற பெரும் பணிகளால் ஊரின் வளர்ச்சியும், பண்ணையின் வளர்ச்சியும் மிக சீராக காணப்பட்டது. மாடுகளினாலும் ஏர்களினாலும் விரைந்து விவசாய வேலைகளை குறிப்பிட்ட பருவ காலத்திற்குள் முடிக்க இயலாத காரியம் என்று கருதிய இவர் முதன் முறையாக நவீன உழவு இயந்திரத்தை [ஏருந்து-ட்ராக்டர்] வரவழைத்து பண்ணையில் அறிமுகப்படுத்தி அதிக மகசூலையும் நேரத்தையும் சேகரித்தார். இருப்பினும் பல குளத்துவயல்களை கொண்ட இவரது பண்ணை சில நேரங்களில் பருவ காலங்களை தவறவிட்டிருக்கும் ஆகையால் அதிகபட்சமான மகசூலை எட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. உழவு இயந்திரத்தின் ஓட்டுநராக சிலோன் என்பவர் அமர்த்தப்பட்டார். இவர் சிலோன் [தற்பொழுது இலங்கை] என்ற நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியவர், கடமை கட்டுப்பாட்டுடன் தம்பணியை திறம்பட ஆற்றியவர், எல்லோராலும் போற்றப்பட்டவர், அவர் அதிகம் பயன்படுத்திய வார்த்தையான "சரிங்க சரிங்க" இன்றும் எல்லோருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இந்த வார்த்தையில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன, நான்குமுறை உச்சரித்து பார்த்தால் உண்மை புரியும், விளங்கும், என்ன சரிதானே?!!. மூக்காண்டிக்கோனாரால் தொடங்கப்பட்ட அடுக்குமாடி வீட்டின் பணிகள் அவரது மறைவைத்தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டன, அப்பணிகளை அடைக்கப்பன் விரைந்து முடித்தார். தன் தம்பிகளான இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகிய இருவருக்கும் நன்கல்வி புகட்டி, இராசப்பன் அவர்களுக்கு அரசு வருவாய் துறையில் கிராம நிர்வாக அலுவலராகவும், சுவாமிகண்ணு அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணிபுரிய வழிவகுத்தார்.

No comments:

Post a Comment