மீன் தொட்டி

Monday, August 30, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 07

பண்ணையின் பிளவு

ஒரு வருடகாலம் இருந்த வளங்களை கொண்டு பண்ணையை சிறப்பாக நிர்வகித்து வந்தார் இருப்பினும் பண்ணைக்காரர் அவர்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இராசப்பன் அவர்கள் 1995 ஆம் ஆண்டு பாகப்பிரிவினைக்கு பண்ணைக்காரர் அவர்களிடம் பரிந்துரை செய்தார்கள். பரிந்துரையை பரிசீலனை செய்த பண்ணைக்காரர் அவர்கள் பாகப்பிரிவினைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து கூட்டத்தைக்கூட்டுமாறு உத்தரவிட்டார்கள். அதன்பொருட்டு கூட்டம் கூடுயது, கூட்டத்தை சில நாழிகை மவுனம் கவ்விகொண்டிருந்தது, மவுனத்தின் மரணபொழுதில் இராசப்பன் அவர்கள் புதுக்காடு மற்றும் செவிடன் காடுகளின் வடக்கு வேலியை கிழக்கு மேற்காகக்கொண்டு தெற்கில் இருக்கும் நிலப்பரப்பை யாரேனும் இருவரும், வடக்கில் இருக்கும் நிலப்பரப்பை யாரேனும் ஒருவரும் எடுத்துக்கொள்ளும்படி கூட்டத்தில் கூறினார்கள். இக்கூற்றை ஆமோதித்து பண்ணைக்காரர் அவர்கள் "நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி புதுக்காடு, செவிடன் காடுகளின் வடக்கு வேலிக்கு பதிலாக தெற்கு வேலியை கிழக்கு மேற்காகக்கொண்டு நானே வடக்கில் நின்று கொள்ளுகிறேன் என்று கூறி தன் உரையை முடித்தார்கள்". இதற்கு இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு அவர்கள் எவ்வித எதிர்ப்பும் கூறாது ஒருமனதாக இருவரும் ஆமோதித்தனர். இருப்பினும் கூட்டத்தில் சில சலசலப்புகள் எழுந்து அமர்ந்தது.

அதன்படி, கீழப்பட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டை பண்ணைக்காரர் அவர்களுக்கும், கூரை வீட்டை சுவாமிக்கண்ணு அவர்களுக்கும் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டது, ஆனால் தற்பொழுது இராசப்பன் அவர்கள் தொடர்ந்து கூரை வீட்டிலே குடியிருக்கலாம் என்று கூட்டம் தீர்மானித்தது. சுவாமிக்கண்ணு எப்பொழுது இக்கூரை வீடு வேண்டுமென்று விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் இராசப்பன் அவர்கள் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், களத்துபட்டியான் காட்டை மூன்றாக பிரித்து மூவரும் தலா ஒரு பகுதியை பெற்று தங்கள் வீடுகளை கட்டிகொள்ள வேண்டுமென்றும் பெரியக்கா அவர்கள் இவ்விடத்தில் உரைத்துக்கூறினார்.

இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகிய இருவருக்கும் ஒன்றாக தெற்கே ஒதுக்கப்பட்டு ஆண்டிக்கோன்வயல்கள் முதன்மை வயல்களாக விளங்குமென்றும், வடக்கே பண்ணைக்காரர் அவர்களுக்கு நெற்களம் செட்டி காட்டில் அமைக்கப்பட்டு, பெரியகுளத்து வயல்கள் முதன்மை வயல்களாக விளங்குமென்றும் அறிவிக்கப்பட்டது. சுவாமிக்கண்ணு அவர்களின் கூற்றுக்கிணங்க ஆடுகளும், மாடுகளும் இரண்டாக மட்டுமே பிரிக்கப்பட்டது. உழவு இயந்திரம் "ஏருந்து-ட்ராக்டர்" மற்றும் ஆங்காங்கே உள்ள வீட்டுமனை இடங்களும் பண்ணைக்காரர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறாக அனைத்து பண்ணை சொத்துகளும் பிரிக்கப்பட்டது.

இதுவரை ஒரே தலைமை பாதையில் சீராக பயணித்து கொண்டிருந்த பண்ணையெனும் இரத்தினத்தேர் இருசிறுபாகமாக பிளவுபட்டு சற்று வேகமாக பயணிக்க தொடங்கியது. பிரிவு என்பது ஒரு இயற்கை விதிதானே, அதனை தடுத்து அணையிட யாரும் உண்டோ!! இப்பண்ணை பல பாகப்பிரிவினைகளைக் கடந்து வந்தபோதிலும் இப்பாகப்பிரிவினையால் 1995 ஆம் ஆண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது. பண்ணைக்காரர் அவர்களின் ஆலோசணைபடி அவரது நெற்களம் செட்டி காட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டு, பெரிய பண்ணையின் வேளாண்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் சந்திர சேகர், இரவி, அமுதா ஆகிய மூவரும் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வை எதிர்நோக்கியிருந்ததால் பெருஞ்சிரமத்திற்கு ஆளானார்கள். தேர்வையடுத்து அமுதாவின் படிப்பு நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளை கவனிக்க அறிவுருத்தப்பட்டது.


இராசப்பன் அவர்களின் பண்ணை நிர்வாகம்


இராசப்பன் அவர்கள் தலைமையில் பூர்வீக நெற்களமான தெற்கிக்களதில் பண்ணைப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதற்கான அடிப்படைதேவைகள் சற்று இல்லாது காணப்பட்டது. உழவு செய்வதற்கு கலப்பை மற்றும் அதனை சார்ந்த உபகரணங்களும் இல்லை, ஒரு இணை மாடுகள் மட்டுமே பாகப்பிரிவினையில் வழங்கப்பட்டது. அந்த கடின காலங்களில் ஏர்களும், உழவு மாடுகளும் இரவலாக பெறப்பட்டு அந்த விவசாய ஆண்டை வெற்றிகரமாக எதிர்கொண்டார். இராசப்பன் அவர்கள் பண்ணையின் தலைமை பொறுப்பேற்று முதல் பெரும்பணியாக பல காலங்கள் கிடப்பிலிடப்பட்ட களத்து வீட்டு கட்டிடத்தை ஒரு சில மாற்றங்களை கொண்டு குறுகியகாலத்தில் பூர்த்தி செய்தார்.


அதனையடுத்து தீர்க்கமாக சிந்தித்தும், அனுபவமிக்கவர்களிடம் ஆலோசிக்கப்பட்டும், அனைத்து தரப்புகளிலும் உற்று ஆராய்ந்து பல மாற்றங்களை செய்து பண்ணையின் சீரான வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். முதற்கட்டமாக ஏர் கலப்பைகளை உலோகத்தில் வடிவமைத்து பயன்படுத்தபட்டது. ஏர் உழவு இணை மாடுகளுக்காக மோகன்ராய்-பிள்ளைக்குட்டை ஆகிய இருமாடுகளையும் அபுத்தாவின் ஆணைப்படி, பண்ணைக்காரரிடமிருந்து ரூபாய் 5001 க்கு வாங்கப்பட்டும், செர்சி-நொண்டி மற்றும் அதிவேக மாடுகளான காரி-மயிலை ஆகிய இரு இணை மாடுகளை வெளியிலிருந்தும், குட்லா-சோழா மற்றும் வெள்ளைகரா-கத்தி ஆகிய இரு இணை மாடுகளை தம் பண்ணை மாட்டுக்கிடையிலேயே [பட்டி என்றும் கூறுவர்] பெற்றும், முதல் இணை மாடுகளான பெரியவண்டி மாடுகள் உட்பட ஆக மொத்தம் ஆறு இணை மாடுகளை ஆயத்தம் செய்து பண்ணையில் இணைக்கப்பட்டு அனைத்து ஏர்களுக்கும் உலோக கலப்பைகளை வடிவமைக்கபட்டும் அதிக வழுவுடைய தொடகயிறுகளை கொண்டும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தருணத்தில் பண்ணையின் அடிப்படை தேவைகள் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டது. மழையின் அளவு நன்றாக இருந்ததால் விளைச்சலும் நன்றாகவே இருந்தது. இராசப்பன் அவர்கள் வைத்திகடை தீனியில்லாது வீடுதிரும்ப மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொருவரும் மாலைபொழுதில் அவரின் வருகைக்கு காத்து நிற்பார்கள். ஆதிகாலம் முதல் குளத்து நீர்பாசனம் பண்ணையின் சம்மதம் பெற்றே ஓட்டிசெல்வது வழக்கம். இருப்பினும் குளத்து நீர் நேரப்பகுப்பு காரணமாக பாகப்பிரிவிணைக்குப்பிறகு ஒரு சிக்கலான பிரச்சனை [பொலவம்] 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் களத்தில் தோன்றி எதிர்கொள்ளப்பட்டது. இப்பிரச்சனையால் மாபெரும் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்த பண்ணைக்கு அனைத்து மக்களும் உட்பொருள் அறியாமல் எதிராக செயல்பட தொடங்கினார்கள். இதனால் சில குறைகள் இருப்பினும் பல நன்மைகளை கற்றுத்தந்து ஒருபடி உயரத்தை எட்டுவதற்கும், சில பொது வேலைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருந்தது.


வளர்ச்சி பாதையில் பண்ணை


அடுத்தகட்டமாக நீர் ஆதாரங்களை தேடும் பணியில் பண்ணை இறங்கியது. களத்து கிணறு பண்ணைகாரர் காலத்திலேயே சில வருடங்கள் நீரற்று வற்றி இருந்தது. அதன்பிறகு கிணற்றில் சுற்றடித்தளம் அமைத்து 11 அடி ஆழம் வெட்டப்பட்டு தோணியின் தேவையை பூர்த்தி செய்து வழிவகை செய்தார். அதே நேரத்தில் 1977 ஆண்டு வெள்ளப்பெருக்கில் அனைத்து குளங்களும் உடைப்பு ஏற்பட்டதனால் பயன்பாட்டில் இல்லாத பெரிய கிணற்றை, செப்பணிடப்பட்டும் தூர்வாரப்பட்டும், அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தின் அடிபடையிலே ஒரு பகுதியை சுமார் 20 அடி ஆழம் வெட்டப்பட்டது. இருபினும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. அதன்பிறகு கிழக்கி கிணற்றை ஒப்பந்ததின் பெயரிலும், களத்து கிணற்றை பண்ணையே ஏற்று ஆழ்படுத்த தீர்மானம் செய்யப்பட்டது. கிழக்கி கிணறு சுமார் 25 அடிகள் வெட்டப்பட்டு மொத்தம் 72 அடி ஆழத்தையும் 7 பக்கவாட்டு ஆழ்துளைகளையும் கொண்டுள்ளது. களத்து கிணறு பண்ணையின் பொறுபிலேயே வெட்டுவதற்கு காரணமாக அபுத்தா இருந்தார், அவரது சொல்வாக்கானது தனது மரணத்திற்கு பிறகே இந்த கிணறை ஆழ்படுத்தும் ஆலோசணையை உங்கள் மனதில் கொள்ளுங்கள் என்பதாகும். அதற்கு ஏற்றவாறு இயந்திரப்பொறி அறையின் உறுதியான கிழக்குப்பக்க சுவர் மிகச் சரியாக கிணற்று கட்டிடத்தின் மேல் அமைந்திருந்தது இத் திட்டத்திற்கு பெரும் சிக்கலாக இருந்தது. இவ்வறை மூக்காண்டிக்கோனாரால் 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடதக்கது. இருபினும் இராசப்பன் அவர்கள் உறுதிதன்மையை சில மாதகாலம் உற்று ஆராய்ந்து ஒரு வழியாக திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தார்கள். இத்திட்டதில் பல சுவாரசியங்களை அனுபவித்தும், பல இடர்பாடுகளை நிவர்த்தி செய்தும் இக்கிணறு 78 அடி ஆழத்தையும், 5 பக்கவாட்டு ஆழ்துளைகள் தலா 200 அடிகளை கொண்டும் இத்திட்டம் மிக கவனமாக நிறைவேற்றப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் குளத்து வாரிகளை நன்கு பராமரித்து வந்தார். அனைத்து கிணறுகளையும் இணைப்பதற்கும், அதிவேகபாசன முறையை அமுல் படுத்துவதற்கு இரட்டை பாதாள பாசன குழாய்களை அமைத்தார். இந்த இரட்டை பாசன குழாய்களால் ஒரே நேரத்தில் இரண்டு கிணறுகளின் நீர் எந்த ஒரு புள்ளியிலும் பெறப்பட்டு மிக துரிதமாக வயலுக்கு பாசனம் செய்யப்பட்டு நீர்பாசன முறையில் மாபெரும் புரட்சியை கண்டார். இயந்திரப்பொறியின் [முகட்டி-மோட்டர்] நிலையான ஒரே இடத்தில் கிணற்றுகுள்ளோ அல்லது வெளியிலோ அமைக்கப்பட்டிருந்த மேடைகளினால் முகட்டிகளின் செயல்பாடுகள் அதிக இடர்பாடுகளினால் செயல்திறன் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையான மேடைகளை களைந்து பளுத்தூக்கி இயந்திரம் மூலம் இயந்திரப்பொறிகளை தொங்கவிடும் முறையை அறிமுகம் செய்து ஓரளவு பயனை பெறப்பட்டது. இதன் பயனாக மிக எளிதில் முகட்டியை கிணற்று நீரின் அளவிற்கு ஏற்றவாறு அனுசரித்து வைத்துகொள்ள முடிந்தது.

பின்னர் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் உச்சமாக நீர்மூழ்கி முகட்டிகளை அறிமுகம் செய்து விவசாயத்தின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்க வழிவகுத்தார். இராசப்பன் அவர்களின் நெருங்கிய மற்றும் முக்கிய ஆலோசகராக உசிலம்பட்டி திரு. சின்னையா அவர்கள் இருந்து வருகின்றார். இவர் தன் தாயாரின் தங்கை மகன் மற்றும் இவரும் தமிழக அரசு வருவாய் துறையில் கிராம நிருவாக அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தக்க நேரத்தில் சரியான, தீர்க்கமான, அதிலுள்ள ஏற்றதாழ்வுகளை கண்டறிந்து முடிவுகளை தீர்மானிப்பதில் சிறந்தவர் மற்றும் தன் சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் காத்துகொள்பவர். புதிய முயற்சியாக 2000 ஆம் ஆண்டு ஒரு உழவு இயந்திரம் வாங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டு மகிந்திரா பி-275 ரக இயந்திரத்தை வாங்கினார். உழவு இயந்திரம் பண்ணையை அடைந்த குறுகிய காலங்களிலே குட்லா-உழவுமாடு யாரும் அறியாது தீடீரென களத்தில் இறந்துபோனது, மாட்டின் இறப்பு பண்ணையை பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. சுமார் ஒரு வருட காலம் ஏருந்து செம்மையாக பயன்படுத்தப்பட்டதன் விளைவாக பெருவாரியான தரிசு நிலங்களை விவசாய நிலத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு பண்ணையில் அனைவரின் ஒத்த முடிவுடன் உழவு இயந்திரம் விற்பனை செய்யப்பட்டது. பண்ணையில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் மாடுகள் ஆகிய கால்நடைகள் பெரும் பங்குவகுகின்றன. பண்ணையின் சீரான இயற்கை சுழற்சிக்கு கால்நடைகள் மிகமுக்கியம் ஆனால் அவற்றை பராமரிப்பது மிக கடினமான வேலை, இருபினும் இடையர்களின் தொன்மையான தொழில் ஆடுமாடுகளை வளர்ப்பது, அதனைபராமரித்து, அதில்வரும் வருமானத்தை கொண்டு வாழ்வதுமாக இருந்தது. இராசப்பன் அவர்கள் ஒரு கால்நடை மருத்துவரை நியமனம் செய்து, குறிப்பிட்ட காலசுழற்சியில் ஆய்வுசெய்து, கால்நடைகளின் நோய்நொடிகளை விரட்டி, மருத்துவரின் ஆலோசனைபடி ஆடுகளுக்கு கூரைகளுடன் கூடிய கொட்டங்களை அமைத்தும் பனிபொழிவு, மழைபொழிவு மற்றும் சீதோசன சீற்றம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் திட்டத்தை நிறைவேற்றினார்.

இராசப்பன் அவர்கள் பெரும் பண்ணையை நிர்வகித்தபோதிலும் குடியிருப்பது கூரை வீடுதான் என்றும், இவர் ஈட்டும் பொருளும் பணமும் பிள்ளைகளை படிக்கவைத்து வீண்செலவு செய்கிறார் என்றும் ஊர் ஊளையிட்டது. இவர் எதிர்காலத்தை நன்றாக கணித்து ஊரின் ஓலத்தை லட்சியம் செய்யாது தன்பணியை தொடர்ந்து வந்தார். தொன்மையான கூரை வீடு ஒரு அறிய பொருளாகவும் அதனை தன் வாழ்நாளில் காக்கவேண்டும் என்று எண்ணி வந்தார் ஆனால் இயற்கைக்கு எதிராக இவ்வுலகில் என்ன இருக்கிறது? தொடக்கம் இருந்தால் முடிவு இருந்துதானே ஆகவேண்டும். இக்கூரை வீடு தன் வயதான காலத்தில் 2005 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் மழையில் சிக்கி சின்னாபின்னமானது. இராசப்பன் அவர்கள் கட்டட நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் மூலமாக ஆலோசிக்கபட்டு 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூரை வீடு இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய வீட்டிற்கு அடிகல் நாட்டினார்.

வீட்டின் வேலைகள் மிகசீரான வேகத்தில் தொடர்ந்து இருஅடுக்குமாடிகளை எட்டியது. வீட்டின் தோற்றம் மிக நன்றாக இருந்ததால், அத்தோற்றத்தை மேலும் வசீகரிக்க ஒரு அடுக்கு உயரம் உயர்த்த அனைவரின் ஒப்புதலைப்பெற்று இறுதியில் மூன்று அடுக்குகளையும், ஒரு தனியறை நான்காவது அடுக்கிலும் அமைத்து, ஒரு அடையாள சின்னமாக உருவெடுத்து அதில் பண்ணையின் சிறப்புமிக்கவர்களின் பெயர்களை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் இராசப்பன் அவர்கள் தன் கிராம நிருவாக அலுவலர் பணியிலிருந்து 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் ஓய்வு பெற்றார்கள்.

Saturday, August 28, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 06

கல்வி பயணம்

மூத்தமகனான செந்தில் குமாரை 1981 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலகுறிச்சியில் உள்ள செய்ண்ட் ஜோஸப் தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் சேர்க்கப்பட்டார். பாலகுறிச்சியில் உள்ள செய்ண்ட் ஜோஸப் தொடக்கப்பள்ளி மற்றும் செய்ண்ட் ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளிகள் தன் கல்வி முறையில் இன்றளவும் அதீத சாதனைகளை செய்து வருகிறது. இப்பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். சந்திர சேகர், இரவி மற்றும் அமுதா ஆகியவர்கள் முதலில் சென்னை மாநகரில் சுவாமிகண்ணு கண்காணிப்பிலும், அபுத்தாவின் அரவணைப்பிலும் ஒரு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.


சட்டவல்லுநராக பணியாற்றிவரும் சுவாமிக்கண்ணு அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கும், வீட்டு வேலைகளை கவனிப்பதற்காகவும் அபுத்தாவை சென்னைக்கு அடைக்கப்பன் அவர்கள் அனுப்பிவைத்தார். சுவாமிக்கண்ணு அவர்களின் திருமணத்தையடுத்து அபுத்தாவை சென்னையிலிருந்து பண்ணைக்கு வரவழைக்கப்பட்டார். இதன் காரணமாக இவர்கள் மூவரின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது, உடனடியாக அடைக்கப்பன் அவர்கள் மூவரையும் பாலகுறிச்சியில் தமிழ் வழி கல்வியில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்தார். அபுத்தாவை 1985 ஆம் ஆண்டு பாலகுறிச்சிக்கு அனுப்பி முன்னதாகவே விடுதியில் தங்கி படித்துக் கொண்டுயிருந்த செந்தில் குமார் மற்றும் இவர்கள் மூவரையும் முதலில் படையாச்சி தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் அமர்த்தி படிக்க வழிவகை செய்தார். ஒரு வருடத்திற்கு பிறகு தோமையம்மாள் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இவ்வீடானது பள்ளிக்கும், கிருத்துவ தேவாலயத்திற்கும் மிக அருகாமையில் அமைந்திருந்தது. அபுத்தாவிற்கு தேவையான விறகு, அரிசி, பருப்பு போன்ற அனைத்துப்பொருட்களையும் அடைக்கப்பன் அவர்கள் பண்ணையிலிருந்து மாட்டுவண்டி மூலமாக மாதம்தோறும் பாலகுறிச்சிக்கு அனுப்பிவைப்பார். கிட்டுவையும், காந்தியையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலகுறிச்சி பள்ளியிலேயே 1986 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழி கல்விப்பாடத்தில் சேர்த்து விடப்பட்ட இருவரும் தங்கள் கல்வி பயிலும் பயிற்சியை ஒரே பள்ளி வகுப்பில் தொடந்தனர். இத்தருணத்தில் செந்தில்குமார், சந்திர சேகர், இரவி, அமுதா, கிட்டு மற்றும் காந்தி ஆகிய ஆறு பேருடன் அபுத்தவும் தோமையம்மாள் வீட்டில் குடியிருந்தனர்.


தோமையம்மாள் குடும்பம் மாபெரும் உதவிகளை இந்த பண்ணையின் குழந்தைகளுக்காக செய்துவந்தார்கள். தோமையம்மாளுக்கு ஐந்து மகள்களான மேரி, ரோஸி, ராணி, ராசம் மற்றும் ஜெயா ஆவார்கள். ராணி அவர்கள் செயிண்ட் ஜோஸப் ஆரம்பபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவந்தார்கள். பண்ணையிலிருந்து வந்த ஆறு பேருக்கு மாலை நேரத்தில் போதனை வகுப்புகள் ஆசிரியை ராணி அவர்களால் நடத்தப்பட்டது. இவர் அந்த ஆறுபேரின் கல்வி வாழ்க்கை சிறப்படைய மிகப்பெரும் தொண்டாற்றினார். மற்ற சகோதிரிகளான மேரி, ரோஸி, ராசம் மற்றும் ஜெயா ஆகியோர்கள் கல்விக்காக உறுதுணை புரிந்தார்கள். வண்ணாரப்பட்டி குடும்பமும் பண்ணை குடும்பம் போலவே அவர்களது குழந்தைகளை பாலகுறிச்சி பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர். இக்குழந்தைகளும் ஆசிரியை ராணி அவர்களால் வழிநடத்தப்பட்டனர். இதில் வண்ணாரப்பட்டி இரவி, பழனிச்சாமி ஆகியவர்கள் சந்திர சேகர், இரவி, அமுதா ஆகியவர்களுடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வந்தனர். வண்ணாரப்பட்டி ஆறுமுகம், கிட்டு மற்றும் காந்தி ஆகிய மூவரும் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வந்தனர். ஞாயிறு விடுமுறைதினங்களில் பொழுதுபோக்காக மிதிவண்டி சக்கரங்களை உருட்டி விளையாடுதல், அங்குள்ள கிணறுகளிலும், பெரியகுளத்திலும் குளித்து விளையாடுதல், கிளியாட்டம், கிட்டிப்பிள்ளை, பம்பரக்கட்டை, கண்ணாம்பூச்சி, நூற்றாம் குச்சி, பல்லாங்குழி, தாயம், புளியங்கொட்டை, அச்சாங்கல் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள். ஞாயிறுதோறும் மாலைப்பொழுதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தையும், மற்ற நிகழ்ச்சிகளையும் காண அங்குள்ள கிருத்துவ குடும்பங்களுக்கு செல்வது வழக்கம்.


விவசாய வேலைகளை பெரிதும் போற்றும் இவர்கள் சில நேரங்களில் அங்குள்ள விவசாய குடும்பங்களில் கடலை உடைத்தல், கரும்பு வெட்டுதல் போன்ற வேலைகளையும், சாமியார் தோட்டத்திலுள்ள செடிகொடிகளுக்கு களைவெட்டுதல், நீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து வந்தார்கள். கிருத்துவ தேவாலயத்திற்கு சென்று வழிபடுதல், வருடந்தோரும் வரும் திருவிழா, தேரோட்டம், யேசு பரம்பொருளின் கல்வாரி மலை பயணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமதஅடிப்படை வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அடைக்கப்பன் அவர்கள் பலமுறை பாலக்குறிச்சிக்கு பயணம் செய்து தன் தாயாரையும் அங்குள்ள அனைவரையும் பார்த்து நலம் விசாரித்து வருவார்கள். அதே போன்று இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகிய இவர்களும் பாலக்குறிச்சிக்கு சென்று அனைவரையும் கண்டு நலம் ஆராய்ந்து வந்தார்கள். அபுத்தா அவர்கள் மிகச்சிறப்பாக தன் கடமையை செய்து, அனைவரையும் ஒரே அளவுகோலால் பார்த்து, எந்த பாரபட்சமின்றியும் வளர்த்து வந்தார்கள். இருப்பினும் பண்ணைக்குழந்தைகளை பராமரித்து வருவதில் பல சிரமங்களை எதிர் கொண்டு, அதனை தன் அதீத புத்திக்கூர்மையால் மிகவும் சாதூர்த்தியமாக கையாண்டு வந்தார். இவர் சுட்டிதனம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கி அதை செயல்படுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இருக்க இயலாது. இரு கைகளையும், கால்களையும் பிடித்துக்கொண்டு திரட்சியான பச்சை மிளகாயை கண்ணில் கிள்ளி எறிவதை கடைசிக்கட்டமாக இவர் கையாலும் தண்டனை முறை ஆகும்.


இவர்களுக்கு தினேஷ்குமார், திலீப்குமார், வள்ளி, ஜோஸ், தாஸ், ஜேம்ஸ், கலா, லதா போன்ற தங்களுடன் படித்த தோழர்கள், தோழிகள் ஆவார்கள். தேர்வு மற்றும் பண்டிகை விடுமுறைகளில் அனைவரும் சொந்தவூருக்கு செல்வது வழக்கம். செந்தில்குமார் 9 ஆம் வகுப்பும், சந்திர சேகர், இரவி மற்றும் அமுதா உள்ளிட்டோர் 5 ஆம் வகுப்பும், கிட்டு மற்றும் காந்தி ஆகிய இருவரும் 4 ஆம் வகுப்பும் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது அபுத்தாவின் உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு 1990 ஆம் ஆண்டு பாலக்குறிச்சி பள்ளிவாழ்க்கையை அடைக்கப்பன் அவர்கள் முடிவின்படி, செந்திலை மட்டும் அங்கேயே தொடர்ந்து படிக்கவைத்து, மற்ற அனைவரையும் சொந்த ஊரிலே படிக்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


விராலிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சந்திர சேகர், இரவி ஆகிய இருவரையும் 6 ஆம் வகுப்பிலும், கொடும்பாலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காந்தியை 5 ஆம் வகுப்பிலும் - அமுதாவை 6 ஆம் வகுப்பிலும், காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கிட்டுவை 5 ஆம் வகுப்பிலும் சேர்த்து தொடர்ந்து படிக்கவைக்கப்பட்டது. காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் போஸ் மற்றும் சக்தி இருவரும் ஏற்கனவே நுழைவு பெற்று படித்து வந்தார்கள். இவர்களுடன் செல்வம்.து, கணேஷன், சீனிவாசன்., செல்வம், பழனியப்பன், அடைக்கன் [பாஸ்கர்], லட்சுமி, செல்லமணி, மீனாட்சி, கண்ணன், குமரேசன், தங்கமணி, பூங்கொடி போன்ற உள்ளூர் தோழ பெருமக்களும் ஆங்காங்கே கல்வி பயின்று வந்தார்கள். சுவாமிக்கண்ணு அவர்கள் சென்னை கோல பெருமாள் செட்டி வைஷ்னவ மேல்நிலைப்பள்ளியில் நவீன் மற்றும் சரண்குமார் இருவரும் நுழைவு பெற்று படிக்க ஏற்பாடு செய்தார்கள். கிட்டு தன் 6 ஆம் வகுப்பை கொடும்பாலூரில் தொடர்ந்து படித்தார். போஸ் மற்றும் சக்தி தங்கள் 5 ஆம் வகுப்பை காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் முடித்துவிட்டு 6 ஆம் வகுப்பை போஸ் விராலிமலையிலும், சக்தி கொடும்பாலூரிலும் தொடர்ந்து படித்தார்கள். கிட்டு-காந்தி தங்கள் 8 ஆம் வகுப்பை விராலிமலையில் தொடர்ந்து படித்து வந்தார்கள். இதுவரை அனைவரும் பண்ணையின் நிழலில் தங்களது கல்வி வாழ்க்கையில் பயணித்தார்கள். பண்ணையின் நிர்வாகப்பொறுப்பு சில அரசியல் காரணமாக அடைக்கப்பன் அவர்களிடமிருந்து இராசப்பன் அவர்களிடத்தில் 1993 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.