மீன் தொட்டி

Sunday, February 17, 2008

காதல் 02

காதலும் முத்தம் தான்.
காதலிப்பது, கொடுக்கும் முத்தம்
காதலிக்கப்படுவது, வாங்கும் முத்தம்.
காதலிப்பவராலேயே காதலிக்கப்படுவது,
கொடுத்து வாங்கும் இதழ்முத்தம்!

முத்தத்தில் முதல்நிலை அடையவும்,
காதலில் மூன்றாம் நிலை கடந்தும்
நாம் நெடுந்தொலைவில் நிற்கிறோம்.

சற்றுமுன் பிறந்த சிசுவென இருந்த காதல்
குழந்தையென வளர்ந்து
தன் குறும்புகளைத் துவங்குகிறது.

மழலையின் ஆசைகள் நிறைவேற்றும்
தாய்மனமென மாறுகின்றன
நம் இதயங்கள்.

காதல் தனிமையாகிறதாம்.
நாம் சந்தித்துக் கொள்கிறோம்.
காதலும் சேர்ந்து கொள்கிறது.

காதலுக்கு வெயிலடிக்கிறதாம்.
மரநிழலில் அமர்ந்து பேசிக்கொள்கிறோம்.
காதல் குளிர்கிறது.

காதலுக்கு தாகமாம்.
ஒன்றாய் ஐஸ்க்ரீம்கடை செல்கிறோம்.
காதல் தணிகிறது.

காதலுக்கு சோம்பலாம்.
ஒரு மிதிவண்டியில் ஊர்வலம் வருகிறோம்.
காதல் சுறுசுறுப்பாகிறது.

காதலுக்கு குழப்பம்.
விருப்பு, வெறுப்பு பகிர்கிறோம்.
காதல் தெளிகிறது.

காதலுக்கு பயம்.
எதிர்காலம் திட்டமிடுகிறோம்.
காதல் துணிகிறது.

காதல் குறைகிறதாய்த் தோன்றுகிறது.
மீண்டும் முதல் நாளிலிருந்து நேசிக்கத் துவங்குகிறோம்.
காதல் பூரணமாகிறது.

காதல் பூரணமாகையில்மூளை தூங்கிவிடுகிறது.
மனம் விழித்துக் கொள்கிறது.
விழித்த மனம் கவிதையெனப் பிதற்றுகிறது.

‘நிற்கிறாய்’,
‘பார்க்கிறாய்’,
‘புன்னகைக்கிறாய்’,
‘பேசுகிறாய்’,
என்பதையெல்லாம்…
“அழகுகிறாய்” என்று ஒற்றை வார்த்தையில் குறிப்பிடுகிறேன்.

கேட்டதும் கலகலவென அழகுகிறாய்.
உன் வீட்டுக்கும்என் வீட்டுக்கும்
கனவுகளில் அகவழிச்சாலை அமைக்கிறேன்.
வந்து வந்து போகிறாய்.
போய் போய் வருகிறாய்.

கணக்கு,இயற்பியல், வேதியியல் என வகுப்பில்
எந்த இயல் நடந்தாலும்
எனக்குள் உன் உயிரியலே நடக்கிறதென்கிறேன்.
நமட்டுச் சிரிப்பில் உதடு சுழித்து இதழியல் நடத்துகிறாய்.

உன்னிடம் ஒப்பிக்க
காதல் சிரத்தையோடு கவிதை புத்தகம் வாசிக்கிறேன்.
நீயோ இயல்பாக கவிதைகளைப் பேசி விட்டுப் போகிறாய்.

என் வீட்டுக் கண்ணாடியில் எனக்கு நீ தெரிகிறாய்.
உன் வீட்டுக் கண்ணாடியில் உனக்கு நான் தெரிகிறேன்.
இதயங்களைப் போல கண்ணாடிகளையும் இடம் மாற்றியிருக்குமோ,
காதல்? – உளறுகிறேன் நான்.

நம் வீட்டுக்கண்ணாடியில் நாம் தெரிவோமென கண்ணடிக்கிறாய்.
நட்சத்திரங்கள் துடைத்து
என் இரவுகளை சுத்தமாக வைத்திருக்கிறேன்.
நிலவென நீ வருகிறாய்.
எங்கிருந்தோ வந்து மொய்க்கத் துவங்குகின்றன நட்சத்திரங்கள்.

கல்விக்கூடமே நம் காதல்
கூடமானதென நகைக்கிறேன்.
கல்வி போல காதலும் கைகூடுமென
நம்பிக்கை நல்குகிறாய்.

இப்படிகணம் தோறும்
கனவுகள் சுமக்கும்
இரண்டு உயிர்களும்
உருகி உருகி
ஒற்றைக் காதலுக்கு
அடங்குகின்றன.

அந்த மரநிழலில்
நம் காதல் குளிர்ந்து கொண்டிருந்த
ஒரு மதியவேளையில்,
நம்மிருவரையும் தலைமையாசிரியர் அழைத்து வரச்சொன்னதாக
உன் தோழி சொல்ல,
நம்மை நாம் பார்த்துக் கொண்டோம்.
நான்கு கண்களிலும் ஒரே பயம்.


தலைமையாசிரியர் அறைக்குள்
பயத்தோடு நகம் கடித்தபடி நீயும்
பயமில்லாமல் முகம் நடித்தபடி நானும் நின்றிருக்க
இயல்பாய்ப் பேசினார் அவர்.…

அருகிலிருக்கும் கான்வெண்ட் பள்ளியொன்றில்
நிகழும் கலாச்சாரப் போட்டிக்கு செல்லும் குழு
நம்முடைய தலைமையில்…

செய்தியைச் சொன்னதும் ஒன்றாய் நிமிர்கிறோம்.
பிறவிவரங்கள் பெற்றுக்கொண்டு
நாம் வெளியேறுகையில்
நம் நெருக்கம் பற்றி அறிந்தவராய்
பரிசுகளோடு நம் பள்ளிப் பெயரும் முக்கியமென
நாசூக்காய் சொல்லி அமர்ந்தார்.

வகுப்பறையுள் நுழையும்போதே
வியர்வையுடன் படபடக்கிறாய்.
தண்ணீர் குடிக்கிறாய்.
‘எதாவது பேசேன்’ என்று
பயத்தில் என்னை அடிக்கிறாய்.

எங்கிருந்தோ நானனுப்பிய
காதல்மேகம் உன்னிடம் வந்து பொழிகிறது
மழையாய்.

நாம் கைகோர்த்து நடந்த
பாதச்சுவடுகளையெல்லாம்
காதல்சுவடுகளாய்ப் பத்திரபடுத்துகிறது
பூமி.

நம் நிழல்களைக் கூட
இணைத்தேப் பார்க்கிறது
வெயில்.

நம்மைச் சுற்றி மட்டும்
காதலுடன் மணக்கிறது
காற்று.

சந்திக்கமுடியாத இரவுகளில்
நம் முகம் பார்த்துக்கொள்ளும்
மாயக்கண்ணாடியென
நிலவைச் சுமந்து நிற்கிறது
வானம்.

இப்படி நம்காதலுடன்
பஞ்ச பூதங்களும் துணையிருக்க
பயமேன்?
ஆற்றுகிறேன் நான்.

இத்தனை செய்பவை பூதங்களா?
இல்லை… இல்லை…
பஞ்ச தெய்வங்களென சிரித்துக் கொள்கிறாய்.

காதல் இன்னும் நெருங்க,
பயம் விலகி
மீண்டும் பழையபடி புதியவளாய் நீ!

ஒரு வெள்ளி மாலையில்
அந்த பள்ளி நோக்கி
நம் பயணம் துவங்குகிறது.

பேருந்தில் ஒரு சன்னலோர இருக்கையில் நீ.
உன்னருகில் இடம்பிடித்து அமர்ந்திருக்கிறது உன் கூச்சம்.
அருகில் நின்றபடி நான்.
தலையில் தட்டி கூச்சத்தை எழுப்பிவிட்டு
தானமர்ந்துகொண்டு எனக்கும் இடமளிக்கிறது காதல்.

பேருந்து நகரத்தொடங்கியதும்
சன்னல் சதுரத்தில் ஓடத் துவங்குகிறது
உலக சினிமா.

இருக்கைகளில் நாமிருக்க…
காணும் காட்சிகளிலெல்லாம்
இறக்கை கட்டுகிறது நம் மனம்.

அந்தப் பள்ளியின்
பசும்புல்தரை காட்சி வந்ததும்
பயணம் முடிகிறது.

அங்குபயமின்றி சிறகடிக்கும்
கான்வெண்ட் காதல்களைப் பார்த்து
நம் காதல் பிரம்மித்து நிற்க,
சட்டை பிடித்து இழுத்துப் போகிறாய் உள்ளரங்குக்கு.

ஓவியப்போட்டி நடக்குமிடத்தை நெருங்குகிறாய்.
நானும் வருகிறேன்.

‘உனக்கும் ஓவியம் வரையத் தெரியுமா?’
ஆச்சர்யமாய் என்னைப் பார்க்கிறாய்.
‘தெரியும். ஆனால் கண்ணாடியில்தான் வரைவேன்’
‘கண்ணாடியிலா?’
‘ம்ம்ம். உலகிலிருக்கும் எல்லாக் கண்ணாடிகளிலும் அதைத்தான் வரைந்து வைத்திருக்கிறேன்’
கேட்டு கேட்டு சலித்தவளாய் முறைத்துவிட்டு
‘கவிதை போட்டி அந்தப்பக்கம்’ என்று அனுப்பி வைக்கிறாய்.

கவிதையெழுதுகையில்
சொற்களுக்கிடையே நீ மறைந்து மறைந்து எட்டிப்பார்த்தது போல
நீ தீட்டிய வண்ணங்களுக்கிடையே நான் வந்திருப்பேனா?
அன்று
நம்மிருவருக்குமே
பரிசு கிடைக்க
எப்படியெல்லாம் வேண்டிக்கொண்டதோ
நம் காதல்.
நமக்குப் பரிசு கொடுத்து
அந்தப் பள்ளியும் காதல்கூடமானது!

அடுத்தவாரம்பரிசு பெற்ற உன் ஓவியமும், என் கவிதையும்
நம் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் அருகருகே.

நீ தீட்டிய ஓவியத்தில்
என் முகத்தையும்,

‘இருளை
அளவெடுக்கும்
பொன்வண்டின்
ரீங்காரத்தில்
இதயம் சிறைபடுதல் போல…’

எனத் துவங்கும் என் கவிதைவரிகளில் உன் பெயரையும்
நாம் ஒளித்து வைத்ததைக் கண்டுகொள்ள
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?

நாம் வாங்கி வந்த கோப்பைகள்
மேசையின் மீது கம்பீரமாய்
நம் பிள்ளைகளைப் போல…
மேடையேறி இருவரும்
சான்றிதழ் வாங்குகையில்
திருமணப்பரிசு வாங்க
மனதை உறுதிப்படுத்துகிறது
காதல் களம்.

அதுதான் அந்தப்பள்ளியில்
நாம் இணைந்திருக்கும் கடைசி நாளெனெத் தெரியாமல்
தான்வழக்கத்தைவிட அதிகமாகவே அன்று காதலித்தோமா?

நம் காதலை உன் வீடுவரைக்கும்
யாரோ இழுத்துப் போய்விட
அரையாண்டுக்குள்
அடுத்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென
அவசரமாய் உன்னுடன்
அயலூருக்கு காலியாகிறது உன் குடும்பம்.

நொடிப்பொழுதில்
ஆயுளின் முழு ஆண்டுகளும்
முடிந்துபோனவனாய் நான்.

இசையிழந்த பாடலென பரிதவிப்போடு நீ.
காற்று நின்ற காற்றாடியாய் நம் காதல்.

1 comment: